சென்னை: மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்தியா முழுவதும் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை பதவியிடங்களை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், அதிமுக உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகியோரின் பதவிகளும் அடங்கும். குறிப்பாக தமிழக எம்பிக்கள் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது.