வாட்ஸ்அப் குழு அமைத்து டோர் டெலிவரி போதை மாத்திரை, ஸ்டாம்புகள் விற்ற கல்லூரி மாணவி உள்பட 3 பேர் கைது: பல லட்சம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு தினசரி  சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இங்கு ஏசி வசதியுடன் உள்ள 3 பார்களில் இரவு நேரங்களில் மதுவிருந்துடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி பிரேசில் நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற மந்த்திரா கோமரா என்பவரின் கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் விடியவிடிய மது விருந்து நிகழ்ச்சி இங்குள்ள பாரில் நடந்தது.  இதில் கலந்துகொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த இன்ஜினியர் பிரவீன் அதிக மதுபோதையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பார் ஊழியர்கள் உட்பட 6 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வணிக வளாகம் அருகே ஒரு வாலிபர் போதை மாத்திரை விற்பதாக திருமங்கலம் போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையர் சிவபிரசாத், திருமங்கலம் உதவி ஆய்வாளர் சிபுகுமார் தலைமையில் போலீசார் மேற்கண்ட பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை, பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் போதை மாத்திரகைள் இருந்தன. உடனே அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அயனாவரத்தை சேர்ந்த காந்த் (28) என்பதும், இவர் கோட்டூர்புரத்தை சேர்ந்த அப்துல்ஹமீத் (21), கோடம்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண்  டோக்கஸ் (24) ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை,  போதை ஸ்டாம்புகளை விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

மேலும் விசாரணையில், வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு நேரில் வந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து, பல லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் கைதான இளம்பெண்  டோக்கஸ், அடையாறு பகுதியில் உள்ள  தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: