புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரஷ்ய அதிபர் புடின் இன்னும் 3 ஆண்டு மட்டுமே வாழ்வார்?.. மருத்துவர்கள் எச்சரிக்கையால் பரபரப்பு

மாஸ்கோ: புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ரஷ்ய அதிபர் புடின், இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்வார் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. ரஷ்ய உளவு நிறுவனமான எப்எஸ்பி அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட பிரபல செய்தித்தாளில், ‘உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ரஷ்ய அதிபர் புடின் (69), புற்றுநோயால்  பாதிக்கப்பட்டு இருந்தார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் அவரது பார்வைத் திறன் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. அவரை கண்ணாடி அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அவர் கண்ணாடி அணிய மறுத்துவிட்டார். அதனால் அவருக்கு கண் எரிச்சல் அதிகமாகி உள்ளது.

இவரது பணிகளை உளவுத் துறை தலைவரும், தற்போதைய பாதுகாப்பு கவுன்சில் தலைவருமான நிகோலாய் பெட்ருஷேவ் கவனித்து வருகிறார். புடினின் நெருங்கிய நண்பரான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ  விரைவில் மாஸ்கோ வரவுள்ளார். அப்போது அவர் புடினை நேரில் சந்திப்பார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரஷ்ய அதிபர் புடின் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை ரஷிய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி போரிஸ் கார்பிச்கோவ் கூறியதாகவும்,

அவர் தற்போது ரஷ்யாவில் இல்லை என்றும் ‘மிரர்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், புடினின் நோய் மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பான விபரங்களை ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: