மேட்டூர் அணை நீர்மட்டம் 117.92 அடியாக உயர்வு காவிரி டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8539 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியது. நேற்று காலை 117.76 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 10,508 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்தும், இருப்பும் திருப்திகரமாக இருந்ததால், சுதந்திரத்திற்கு பின் முதல்முறையாக மே மாதத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து விட்டார்.

அணையில் இருந்து முதலில் 8 கண் மதகு வழியாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 10 ஆயிரம் கனஅடியாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில் 5,000 கனஅடியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டது. இந்நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8539 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் இன்று காலை 117.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.19 டிஎம்சியாக உள்ளது.

ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் கடந்த 18ம் தேதி 25 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிகள், ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால் ஒகேனக்கல் காவிரிக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்துள்ளது.

நேற்று ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 10,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அருவிகளில் குளிக்கவும் காவிரியில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை 9 மணி முதல் நீக்கப்பட்டதாக கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்தார். கடந்த 7 நாட்களுக்கு பின் மீண்டும் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: