சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழக மக்கள் மற்றும் ஆந்திர மக்களின் நலனுக்காக இரு மாநில அரசுகளும் வழங்கும் ரேஷன் அரிசி இரு மாநில எல்லைகள் வழியாக கர்நாடகாவுக்கு அரிசி கடத்தல் மாபியாக்களால் கடத்தப்பட்டு வருகிறது என்பதை கனத்த மனதுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஆந்திரா மற்றும் தமிழக எல்லையில் உள்ள கண்காணிப்பு குறைபாடுகளை பயன்படுத்தி பொது வினியோக திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்தி வருகிறார்கள். தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள ரைஸ் மில்களுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கு கடத்தல் அரிசி பாலீஸ் செய்யப்பகிறது. அதன்பிறகு இந்த அரிசி கர்நாடகாவுக்கு கடத்தப்படுகிறது. ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி பாலீஸ் செய்யப்பட்டு கர்நாடகாவில் வௌிச்சந்தையில் கிலோ ₹40 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.