வேளச்சேரி: அடையாறு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சென்னை, அடையாறு பகுதியில் தனியாக வசித்து வருபவர் சதா (43, பெயர் மாற்றம்). பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 20ம் தேதி வழக்கம் போல பணி முடிந்து வீட்டுக்கு சென்றார் சதா. அந்த நேரத்தில் அவரை, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டியுள்ளார். கத்தியை காட்டி மிரட்டி, வாயில் துணியை திணித்து கைகளை கட்டியுள்ளார். பின்னர் அந்த வாலிபர், சதாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர், தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். அந்த காட்சியை அவரிடம் காட்டி, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், ஆபாச காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்றும் மிரட்டி விட்டு தப்பினார்.
இருப்பினும் சதா, அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சதாவை பாலியல் பலாத்காரம் செய்தது திருவல்லிக்கேணியை சேர்ந்த கல்லூரி மாணவர் விஷால் (23), என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு:
வேலை முடிந்து சதா, தனியாக செல்வதை நான் பார்த்தேன். தினமும் தனியாக செல்வதை பார்த்ததும் அவரை பின்தொடர்ந்தேன். அப்போதுதான் அவர், வீட்டிலும் தனியாக இருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று அவரை பின்தொடர்ந்து வீட்டுக்கு சென்றேன். அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை பூட்டவில்ைல. உடனே நான் உள்ளே நுழைந்து கதவை பூட்டிக்கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தேன். அதனை வீடியோவாகவும் பதிவு செய்தேன். பின்னர் அதை வெளியே காட்டினால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினேன். இருப்பினும் அவர் துணிச்சலாக புகார் செய்து விட்டார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.