வேலூர்: வேலூர் அருகே மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் ஊர் திருவிழாவுக்கு முன்னதாக இறந்தவர்களின் ஆவியை வீட்டுக்கு மேளதாளத்துடன் அழைத்து வரும் விநோத நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா அத்தியூர் ஊராட்சியில் குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளகொல்லைமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் மக்கள் ஆண்டுதோறும் செல்லியம்மன், தஞ்சியம்மனுக்கு திருவிழா நடத்துகின்றனர். அவ்வாறு திருவிழா நடத்துவதற்கு முன்பு குறி கேட்டு, கடந்தாண்டு இறந்த மலைவாழ் மக்களின் ஆவியை வீட்டுக்கு அழைத்து வரும் விநோத நிகழ்ச்சி நடப்பது வழக்கமாம். அதன்படி, இந்தாண்டு விழா நடத்தும் வகையில் கடந்த 21ம்தேதி கோயில் அருகே பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்றிரவு குறி கேட்டனர்.