திருப்பூரில் பயங்கரம்..!! தாய் மற்றும் இரு மகன்கள் உள்பட 3 பேர் அடித்துக் கொலை: கொலையாளியை தேடுகிறது போலீஸ்

திருப்பூர்: திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 2 மகன்களும் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி என்பவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள பாரதி நகர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனது 2 மகன்கள் தர்ணீஷ் (வயது 9) மற்றும் நித்தீஷ் (வயது 6) ஆகியோருடன் குடியேறினார். இவர்களுடன் 45 வயது மதிக்கத்தக்க ஆண் இருந்த நிலையில், அவரை தனது கணவர் என்று வீட்டு உரிமையாளரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கு முன் திருப்பூரில் வேறு பகுதியில் குடியிருந்ததாகவும், தான் வேலை பார்க்கும் பனியன் கம்பெனி நெருப்பெரிச்சல் பகுதிக்கு அருகில் இருப்பதால் இப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் முத்துமாரி வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

வாடகை வீட்டில் குடியேறி சில தினங்களே ஆன நிலையில், முத்துமாரிக்கும், அவரது உடன் இருந்த ஆணுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணியில் முதல் வீட்டில் எவ்வித சத்தமும் இல்லாததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்று எட்டி பார்த்துள்ளார். அங்கு தாய், 2 மகன்கள் உட்பட மூன்று பேரும் பெட்சீட் மூடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்ததை பார்த்து வீட்டுஉரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர், நெருப்பெரிச்சல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அந்த 3 பேரும் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவர்களுடன் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காலையில் இருந்து வீட்டில் இல்லாததால், அந்த அடையாளம் தெரியாத நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் மாநகர் கமிஷனர் ஏ.ஜி.பாபு நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

மேலும், இந்த கொலையானது எதற்காக நடந்தது? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் திருப்பூரில் சோகத்தையும், பரபரப்பையும்  ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணை குறித்து போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories: