விக்கிரமங்கலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் நியாய விலை கடை-சீரமைக்க கோரிக்கை

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கிடங்கு மற்றும் நியாய விலை கடை அமைந்துள்ள பகுதியில் சுற்று சுவர்கள் உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டிடங்களை சுற்றிலும் முட்புதர்கள் மண்டி காடுகள் போல் உள்ளது. இதனால் இந்தப் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்று சுவர்கள் உடைந்து கிடப்பதால் பாதுகாப்பு கிடங்குகள் பாதுகாப்பின்றி உள்ளது.

மேலும் இதை பலரும் பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்தி வருகின்றனர். முட்புதர்கள் காடுகளாக மண்டி கிடப்பதால் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அதிகமாக அந்தப் பகுதியில் இருந்து வருகின்றன. இதனால் அங்கு செல்லும் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ளது.

பொதுமக்களுக்கும் வினியோக பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் கருவேல முட்புதர்களை அகற்றி உடைந்து கிடக்கும் சுற்றுச்சுவர்களை சரி செய்து பராமரித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: