5,529 பதவிக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் 27ம் தேதி வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை: 5,529 பதவிக்கு 9.95 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வருகிற 27ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இத்தேர்வை, பெண்கள் 6,81,880 பேர், ஆண்கள் 4,96,247 பேர், மூன்றாம் பாலினத்தவர் 48 பேர், மாற்றுத்திறனாளிகள் 14,531 பேர் என 84.44 சதவீதம் பேர் எழுதினர். அதாவது, 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில் இந்த குரூப்2, 2ஏ தேர்வுக்கான கீ ஆன்சர் வருகிற 27ம் தேதி வெளியிடப்படுகிறது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான  உத்தேச விடைகள் (கீ-ஆன்சர்) வருகிற 27ம் தேதி டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். உத்தேச விடைகளுக்கான மறுப்புகள், கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் www.tnpsc.gov.in என்ற இணைய வழியில் தெரிவிக்கலாம். ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் ஆட்சேபனைகள் குறித்து நிபுணர்கள் குழு முடிவெடுத்து பிறகு இறுதி மதிப்பீடு செய்யப்படும்.

தொடர்ந்து முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும். செப்டம்பர் மாதம் மெயின் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மெயின் தேர்வுக்கு ஒரு பணிக்கு 10 பேர் என்ற அடிப்படையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள். தற்போதைய பணியிடங்கள் அடிப்படையில் 55 ஆயிரம் பேர் வரை மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: