படூரில் தமிழக அரசின் வாழ்ந்துகாட்டுவோம் திட்ட செயல்பாடுகள் ஆய்வு

திருப்போரூர்:  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கும் மகளிர் குழுக்களை உலக வங்கியின் மூத்த நிபுணர் சமிக்சுந்தர் தாஸ் மற்றும் தமிழக அரசு மகளிர் வளர்ச்சி குழும நிர்வாக இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், திட்ட மாவட்ட அதிகாரி தினகரன், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முன்னதாக அவர்களை படூர் ஊராட்சி மன்றத்தலைவர் தாரா சுதாகர் வரவேற்றார். மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை தலைவர் சுதாகர் , நிர்வாகிகள் அசோக்ராசன், சரவணன், திட்டப் பயிற்சியாளர் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

மாடித்தோட்ட பயிற்சி வகுப்பு கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் பாரம்பரிய மூலிகைச்செடிகளை பார்வையிட்டு மகளிர் குழுவினர்களிடம் அதுகுறித்த விளக்கங்களை உலக வங்கியின் மூத்த நிபுணர் சமிக்சுந்தர்தாஸ் கேட்டறிந்தார். அடுத்ததாக கிராம வளர்ச்சி துறை கட்டிடத்தின் உள்ளே வளர்க்கப்படும் மாடிகாளான் தோட்ட முறைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்தார். இறுதியாக வாழ்ந்து காட்டுவோம் குழுவினர்களுடன் தமிழக அரசின் மகளிர் வளர்ச்சி குழும நிர்வாக இயக்குனர் மரியம் பல்லவிபால்தேவ் இ.ஆ.ப மற்றும் திட்ட மாவட்ட அதிகாரி தினகரன், செயல்அலுவலர் முருகன் ஆகியோர் தொழில் துவங்கும் மகளிர் குழு பெண்களுடன் கலந்துரையாடினார்.

இயற்கைமுறையில் மூலிகை செடிகள் வளர்ப்பது, மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்து விற்பது, செடிகள் வளர்ப்பு , இயற்கைமுறையில் செடிகள் வளர்ப்பு தொடர்பான சேவைகள் காளாண் வளர்ப்பு குறித்து தொழில் நிறுவனம் துவங்கும் பெண்கள் குழுவினர்களுடன் விவாதிக்கப்பட்டது. சுயதொழில் துவங்கி முன்னேற பெண்கள் குழுவினர்கள் தயாராக உள்ளனர் என்பதும் நிச்சியம் இவர்கள் தொழிலில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழுவினர்கள் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் படூர் ஊராட்சி மன்ற பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories: