ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் அமைக்கபட்ட தற்காலிக பாலம் வெள்ளத்தால் இன்று காலை அடித்து செல்லப்பட்டது. இதனால் 200 கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் ஆந்திர எல்லைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் பாலாறு, நரியம்பட்டு வழியாக வரும் கொட்டாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பச்சக்குப்பம் அருகே இரு ஆறுகளும் கலக்கும் இடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் தரைப்பாலம் மற்றும் காவிரி குடிநீர் பைப்லைன் ஆகியவை பலத்த சேதமடைந்தன.