கம்பம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு பேரன், மருமகளை தீவைத்து எரித்த மாமனார் கைது: குழந்தை சாவு; மருமகள் உயிர் ஊசல்

கம்பம்: கம்பம் அருகே, வரதட்சணை கேட்டு பேரக்குழந்தை, மருமகளுக்கு மாமனார் தீவைத்ததில், குழந்தை பரிதாபமாக இறந்தது. தேனி மாவட்டம், கம்பம் அருகே, நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பாண்டியன் (25), கூலித்தொழிலாளி. இவர், 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுகப்பிரியா (21) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாகித் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. அருண்பாண்டியனின் தந்தை பெரியகருப்பன் (53), நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் மருமகள் சுகப்பிரியாவிடம் வரதட்சணை கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி, ஆத்திரம் அடைந்தவர், சுகப்பிரியா, பேரன் யாகித் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்தார். தீப்பற்றி எரிந்ததில் கதறிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு யாசித் உயிரிழந்தான். சுகப்பிரியா நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெரியகருப்பனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: