வாஷிங்டன்: சந்திரனில் இருந்து மனிதர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட மண்ணில் தாவரங்கள் வளரும் என்பதை புளோரிடா விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளார்கள். பிராணவாயு இல்லாத நிலவின் நிலப்பரப்பில் தாவரங்கள் வளருமா என்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு அதற்கான ஆராய்ச்சிகளை தொடங்கினார்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, பல்வேறு காலகட்டத்தில் நிலவில் இருந்து பூமிக்கு கொண்டுவந்த மண்ணில் மாற்றம் ஏதும் செய்யாமல் சிறிய குடுவைகளில் வைத்து அதில் விதைகளை பதித்து பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக விதைகள் அனைத்தும் முளைக்க தொடங்கியுள்ளன.