உகாண்டாவில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6.58 கோடி ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கும்பலை சேர்ந்த வாலிபர் கைது

சென்னை: உகாண்டாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.6.58 கோடி மதிப்புடைய 940 கிராம் ஹெராயின் போதைப்பொருள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. 80 கேப்சூல்களை வயிற்றுக்குள் விழுங்கி மறைத்து கொண்டு வந்த உகாண்டா வாலிபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிகிறது.

சென்னை வெளிநாட்டில் இருந்து பெருமளவு போதைப்பொருள்  விமானத்தில் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 4.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது உகாண்டா நாட்டை சேர்ந்த எள்ளி ஜேம்ஸ் ஓப்பிள் (27) என்பவர் சுற்றுலா பயணி விசாவில், உகாண்டாவில் இருந்து சார்ஜா வழியாக சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவர் உடமைகளை சோதித்தனர். அவற்றில் எதுவும் இல்லை. பின்பு  தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைந்து சோதனையிட்டனர். ஆடைகளிலும் எதுவும் இல்லை.

ஆனாலும் சந்தேகம் தீராத சுங்க அதிகாரிகள், அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். அப்போது அவருடைய வயிற்றுக்குள் கேப்ஸ்சூல் மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அவரை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு  அவருக்கு இனிமா கொடுத்து அவர் வயிற்றில் இருந்த கேப்சூல்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக 2 நாட்களாக வெளியே எடுக்கப்பட்டது. மொத்தம் 80 கேப்சூல்கள் இருந்தன. அந்த கேப்சூல்களை உடைத்து பார்த்தபோது, அதனுள் ஹெராயின்  போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 940 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 6.58 கோடி.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் உகாண்டா பயணியை கைது செய்தனர். அதோடு அவரை மேலும் விசாரித்தபோது, சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. சென்னையில் யாருக்கு போதைப்பொருளை கொடுக்க வந்தார். சென்னையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் இதேபோல் வயிற்றுக்குள் கேப்சூல்களில் போதைப்பொருள் கடத்தி வந்ததை மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: