தமிழருடனான வணிக தொடர்புக்கு சான்றான சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம் : தமிழர், சீனர் வணிகத்தொடர்புக்கு சான்றாக திகழ்ந்த சீன நாட்டு பீங்கான் ஓடுகளை திருப்புல்லாணி அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவர்கள் கண்டெடுத்தனர்.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010 முதல் செயல்பட்டு வரும் தொன்மை பாதுகாப்பு மன்ற 10ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ், ராம்குமார், பிடல் காஸ்ட்ரோ, அஸ்வின்ராஜ், பாலாஜி ஆகியோர் பொக்கனாரேந்தல் தொடக்கப்பள்ளி, பள்ளபச்சேரி சேதுபதி அரண்மனை கிழக்கே வயல் பகுதிகளில் சீன நாட்டு பீங்கான் ஓடுகளை கண்டெடுத்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:

மாணவர்கள் கண்டெடுத்த சீன நாட்டு பீங்கான் பாண்டங்களில் போர்சலைன், செலடன் என இரு வகை உள்ளன. வெள்ளை களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன் மேல் உருவங்கள், வடிவங்கள் வரைந்து பின் உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்பட்டு போர்சலைன் வகை பீங்கான் பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு கிடைத்தது கிண்ணம், குடுவை, தட்டு, ஜாடி போன்றவற்றின் உடைந்த ஓடுகள் ஆகும். வெள்ளை பீங்கான் மேல் சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு, நீலம், மஞ்சள் நிறத்தில் கோடுகள், பூக்கள், வளைவுகள், இலை வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வரலாற்றின் இடைக்காலமான கிபி 12-13ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை ஆகும்.

கிபி 10-13ம் நூற்றாண்டுகளில் சீனர்களின் முக்கிய வணிக பொருளாக பீங்கான் பாண்டங்கள் இருந்துள்ளன. அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து முத்து, துணி போன்றவற்றை கொள்முதல் செய்துள்ளனர். சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்ல வணிக தொடர்பு நிலவியுள்ளது. சீனாவிலிருந்து வரும் பீங்கான் பாண்டங்கள் ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் துறைமுகத்தில் இறக்கப்பட்டு பின் அங்கிருந்து பாண்டிய நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இங்கு தஞ்சை தமிழ் பல்கலை நடத்திய அகழாய்வில் அதிகளவில் சீன நாட்டு பீங்கான் ஓடுகள் கிடைத்தன. டௌயி சிலு என்ற நூலில் டாபடன் என பெரியபட்டினம் குறிப்பிடப்பட்டுள்ளது. சீன மொழியில் ‘டா’ என்றால் பெரிய எனவும், ‘படன்’ என்றால் பட்டினம் எனவும் பொருள். அகழாய்வு செய்யப்பட்ட தமிழக கடற்கரை பகுதிகள் அனைத்திலும் சீன பீங்கான் பாண்டங்களின் துண்டுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தின் மொத்த கடற்கரையில் கால் பகுதியை கொண்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.பட்டினம் முதல் கீழக்கரை வரை பெரும்பாலான கடற்கரை பகுதிகள், உள்பகுதியிலும் சீன பீங்கான் பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்புல்லாணி பள்ளி வளாகத்தில் இவ்வோடுகளை மாணவர்கள் கண்டெடுத்த நிலையில், திருப்புல்லாணியைச் சுற்றியுள்ள ஊர்களிலும் இவை கண்டெடுக்கப்பட்டதன் மூலம் சீன பீங்கான் பாண்டங்கள் இப்பகுதி மக்களின் பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது. மாணவர்கள் கண்டெடுத்த சீன நாட்டு பீங்கான் ஓடுகளை ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

கீழே கிடக்கும் பளபளப்பான பீங்கான் ஓடுகளை காண்போர் சாதாரணமாக கடந்து செல்லும்போது, திருப்புல்லாணி பள்ளி மாணவர்கள் அவை 900 ஆண்டுகள் பழமையான சீன நாட்டு பீங்கான் ஓடுகள் என்பதை அறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: