பெங்களூரு: நாட்டில் நடக்கும் ஆயுதக் கடத்தல், வெடிகுண்டு அச்சுற்றுதல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தேசிய தரவு மையம் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். நாடு முழுவதும் நடக்கும் குற்றங்கள், அதில் ஈடுபடுவோரின் விவரங்களை சேகரித்து, அதை நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்துவதற்கான வசதிகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. சமீபத்தில் கூட, நாடு முழுவதும் நடந்த பாலியல் பலாத்கார குற்றங்கள், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள் அடங்கிய புள்ளி விவரத்தை அது சேகரித்து வெளியிட்டது. இந்நிலையில், ஹவாலா பணப் பரிவர்த்தனை, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வோர் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரின் தகவல்களையும் சேர்க்க ஏற்பாடு செய்து வருகிறது.