மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார் வந்தால் தொடர்புடைய மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்த உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் உரிமையாளர் ஹேமா ஹுவாரணி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உரிமையாளர் இடைக்கால தடை பெற்றிருந்தார்.

இந்த தடையை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்ரா முன்பு நடைபெற்றது. அப்போது சுதந்திரமான முறையில் தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்றும் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிக்கு தான் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 1987ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்று விளக்கம் அளித்தார்.

அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் அவர் மேற்கொள்காட்டினார். இதையடுத்து மசாஜ் நிலையங்களில் பாலியல் தொழில் புகார் வந்தால் உள்ளூர் போலீசார் சோதனை நடத்த அதிகாரம் உள்ளது என கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: