ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே விஆர்பி சத்திரத்தை சேர்ந்தவர் வீரா (எ) வீரபத்திரன் (34).ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனிகளில் இரும்பு, பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து விற்பனை செய்யும் தொழிலும், புதிதாக கட்டப்படும் தொழிற்சாலைகளுக்கு மண், ஜல்லி, கல் சப்ளையும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 11வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே வீரா நின்றிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 6 பேர், வீராவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த வீராவுக்கு, தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.