விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிருஷ்ணர் உலோக சிலை கிடைத்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (65), விவசாயி. இவர் நேற்று தனது கூரை வீட்டின் அருகில், அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது சுமார் 3 அடி ஆழத்தில் ஏதோ ஒரு பொருள் கடப்பாரையில் தட்டுப்பட்டுள்ளது. தொடர்ந்து தோண்டி எடுத்து பார்த்தபோது, அதில் செம்பு உலோகத்திலான 10 வளையல்கள் மற்றும் கிருஷ்ணர் உலோக சிலை ஒன்று இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த ரத்தினம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.