லக்கிம்பூர்: காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
உத்தர பிரதேசம் மாநிலம், லக்கிம்பூரில் கடந்தாண்டு அக்டோபரில், வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களின் மீது ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதால் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆசிஸ் மிஸ்ரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதற்கு விவசாய அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அவருடைய ஜாமீனை ரத்து செய்யும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.