வேலை முடிந்து அதிகாலை வீடு திருப்பியபோது கத்தி முனையில் இழுத்து சென்று பெண் ஊழியர் பலாத்காரம்: போதை ஆசாமிக்கு போலீஸ் வலை

திருவொற்றியூர்: பெண்ணை, கத்தி முனையில் மிரட்டி பலாத்காரம் செய்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் சுமதி (50, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மாதவரம் பால் பண்ணையில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த 20ம் தேதி, இரவு நேர வேலைக்கு சென்ற சுமதி, வேலை முடிந்து 21ம் தேதி அதிகாலை வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

மாத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 2வது பிரதான சாலையில் உள்ள விளையாட்டு பூங்கா அருகே சென்றபோது, அங்கு போதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆசாமி, சுமதியை வழிமறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, ‘நீ யார், எதற்காக என்னை வழி மறிக்கிறாய்’ என்று கேட்டபடி விறுவிறுவென நடந்தார். அப்போது அந்த ஆசாமி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென சுமதி கழுத்தில் வைத்து, அசைந்தால் குத்தி விடுவேன், என  மிரட்டியுள்ளார். இதனால் சுமதி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார். உடனே அந்த ஆசாமி, சுமதி வாயில் துணியை திணித்து அங்குள்ள விளையாட்டு பூங்காவில் உள்ள மறைவான இடத்திற்கு தரதரவென இழுத்து சென்றார்.

அங்கு, பலவந்தமாக சுமதியை பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதனால் பீதியில் உறைந்த சுமதி, வீட்டுக்கு வந்து, நடந்த சம்பவத்தை கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இதுபற்றி புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், சுமதியை மர்ம ஆசாமி ஒருவர் பலவந்தமாக இழுத்து சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து, வீடியோவில் பதிவான நபரை தேடுகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: