புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பல அடி ஆழத்தில் புதைந்திருந்த கோயில் கருவறையில் இருந்து 1,400 ஆண்டுகள் பழமைமிக்க மகிஷாசுரமர்த்தினி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், தலைநகரான புவனேஸ்வரில் பல பிரபலமான கோயில்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ லிங்கராஜ் கோயிலும் ஒன்று. பழைய புவனேஸ்வர் நகரில் உள்ள இக்கோயில் பகுதிகளை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலின் சிறிது தூரத்தில் உள்ள பவானி சங்கர் கோயில், சுகாசாரி கோயில் இடையே அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதில், தோண்டத் தோண்ட கோயில்களும், சிலைகளும் கிடைத்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில் சுகாசாரி கோயில் வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வின்போது பழமை வாய்ந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், பவானி சங்கர் கோயில் பின்புறம் புதைந்துள்ள கோயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் கருவறையில் நேற்று முன்தினம் மகிஷாசுரமர்த்தினி சிலை கிடைத்தது.