ஈரோடு: குலக்கல்வி திட்டம் ஒழிக்கப்பட்டதுபோல் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வும் ஒழிக்கப்பட வேண்டும் என ஈரோட்டில் நடந்த பரப்புரையில் கி.வீரமணி பேசினார். திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பிரசார பயண பொதுக் கூட்டம் ஈரோட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது: மனுதர்மத்தை 102 ஆண்டுகளுக்கு முன்னரே மாற்றிய பெருமை திராவிட இயக்கங்களுக்கு உண்டு. அப்போது சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் எனும் நிலை இருந்தது. அதிலும் சமஸ்கிருதத்தை பிராமணர்கள் மட்டும் தான் படிக்க முடியும் எனும் நிலை இருந்தது. அதேபோல இப்போது ஒரு நிலையை நீட் எனும் தேர்வின் மூலம் கொண்டு வந்துள்ளனர்.