சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய அரசு பணி பதவி உயர்வில் பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ள ஒன்றிய அரசு, ஒவ்வொரு துறையின் உயர்பதவிகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்களைத் திரட்டி தரும்படி அனைத்துத் துறைகளின் தலைவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை ஒன்றிய அரசு புறம் தள்ள முடியாது. ஒன்றிய அரசின் 75 துறைகளில் மொத்தமுள்ள 27,55,430 பணியாளர்களில் பட்டியலினத்தவர் 4,79,301 (17.30%), பழங்குடியினர் 2,14,738 (7.7%), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 4,57,148 (16.50%) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.