சென்னை: மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் வைகையாற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 பக்தர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மதுரையில் இன்று காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிட் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர்.