அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பாஜ, விசிக இடையே தள்ளுமுள்ளு, மறியல்: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது பாஜக மற்றும்  விசிக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நேற்று புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜவினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது ஏற்கனவே வந்த விசி கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிக்க முற்பட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜக மற்றும் விசிக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் இரு தரப்பினரும் அம்பேத்கர் சிலைக்கு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தலையிட்டதால் முதலில் விசி கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சென்றனர். அதன் பின்னர் பாஜகவினரும் மாலை அணிவித்தனர். பின்னர் பாஜகவினர் ஊர்வலமாக சென்று புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணை தலைவர் புரட்சி கவிதாசன் தலைமையில் கலெக்டர் கவிதா ராமுவை  சந்தித்து புகார் தெரிவித்தனர். கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: