பூந்தமல்லி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வழங்கினார்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் இயக்க குறைபாட்டிற்கு தேவையான கருவிகள் வழங்க அளவீடு செய்யப்பட்டது. இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மாற்றுத்திறன் மதிப்பீட்டு சான்றிதழ்களையும், தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார்.  

அப்போது அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியது திமுக ஆட்சியில்தான். ஊனமுற்றோர் என்ற வார்த்தைக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தையை கூறியவர் கலைஞர். மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு, பேருந்து மற்றும் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், என்றார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர் ஸ்ரீதர், மற்றும் கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: