ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்: சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜர்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். அப்பல்லோ மருத்துவர்கள் செந்தில்குமார், தவபழனி ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினர். ஆறுமுகசாமி ஆணையத்தில் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவர்கள் 9 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டு இருப்பதால் அப்பல்லோ மருத்துவர்களிடம் மறு விசாரணை செய்யவுள்ளது.

9 மருத்துவர்களிடம் 5 மற்றும் 6, 7-ம் தேதிகளில் 3 நாட்கள் மறு விசாரணை நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று மருத்துவர்கள் என 3 நாட்கள் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொள்கிறார். இந்த விசாரணையுடன் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்து அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டது. இதுவரை 156 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு விசாரணையை நிறைவு செய்தனர். இதனால் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

Related Stories: