கோயில்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆணையரின் அனுமதி இல்லாமல் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யக்கூடாது: அதிகாரிகளுக்கு ஆணையர் குமரகுருபரன் எச்சரிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க உரிய அறங்காவலர்/தக்கார் தீர்மானம் பெறப்பட்டுள்ள நிகழ்வுகள் அன்றி, ஆணையரின் குறிப்பான முன் அனுமதியின்றி செயல் அலுவலர்கள் எவரும் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யக்கூடாது. இதை மீறி செயல்பட்டுள்ளது .கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால் அந்த செயல் அலுவலர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறநிறுவனத்திலிருந்து செலவிடப்பட்ட தொகைகள் அனைத்திற்கும் அவரையே தனிப்பட்ட முறையில் சொந்தப் பொறுப்பாக்கப்பட்டு அவரால் அறநிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்படும்.

கோயில் உரிமை மற்றும் நலனுக்கு எதிராக முடிவடைந்த வழக்குகளில் ஆணையரின் முன்அனுமதி பெற்று மேல்முறையீடுகள், சீராய்வு மனுக்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கால அளவிற்குள் உரிய மன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதில் காலதாமதம் கூடாது. குறிப்பாக மேல்முறையீடுகள் தாக்கல் செய்ய அனுமதி கோரும் முன்மொழிவுகள் பிரேரணைகள் உரிய சட்ட அலுவலரின் சட்டக்கருத்து பெறப்பட்ட ஒரு வார காலத்திற்குள் மேல்முறையீட்டிற்கான காரணங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் அந்தந்த உதவி, இணை ஆணையர் மூலம் கண்டிப்பாக இவ்வலுவலகத்துக்கு வரவேண்டும்.

மேல்முறையீடு தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படின் அதற்கு அந்த செயல் அலுவலர்,அறங்காவலர்,தக்கார் முழுப்பொறுப்பாவார்கள். ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரையின்படி கோயில் நிர்வாகிகள் ஆணையரின் ஒப்புதலின்றி நீதிமன்றங்களில் பிரமாணப்பத்திரங்களோ, அறிக்கைகளோ, ஆவணங்களையோ தன்னிச்சையாக தாக்கல் செய்யக்கூடாது. அவ்வாறு செயல்பட்டு அதனால் வழக்கு கோயில் நலனுக்கு எதிராக முடிவு செய்யப்படும் நிகழ்வுகளில் அதற்கு பொறுப்பான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கு அவர்களையே முழுப்பொறுப்பாக்கப்படும்.

Related Stories: