திருவள்ளுர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருவள்ளுர் மாவட்ட புத்தக கண்காட்சிக் குழு நடத்தும் முதலாவது மாபெரும் புத்தக கண்காட்சி அரங்குகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார், ஜெயக்குமார் எம்பி, எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் புத்தக கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு, விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:இந்த புத்தக திருவிழா வரும் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில் நாள்தோறும் ஒரு தலைச்சிறந்த தமிழ் சொற்பொழிவாளர்களால் கருத்துரைகள் வழங்கப்படவுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.