ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி கோர விபத்து!: வேன் ஓட்டுநர், பெண் தொழிலாளர்கள் உள்பட 4 பேர் பலி..10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே லாரியின் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேனில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர். வேன் ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சென்னை - பெங்களூர் சாலைக்கு மாறியது. அச்சமயம் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியதில் வேனில் பயணம் செய்த ஓட்டுநர், 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: