தேச துரோக வழக்கில் திருச்சி கோர்ட்டில் சீமான் ஆஜர்

திருச்சி: தேச துரோக வழக்கில் திருச்சி கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 23 பேர் நேற்று ஆஜராகினர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே பஞ்சப்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சி அரசியல் மாநாடு 2015ல் நடந்தது. மாநாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகள் இயக்கம் குறித்தும், அதன் தலைவரான மறைந்த பிரபாகரன் குறித்தும் பேசினர். இதனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தேச துரோக பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி ஜேஎம்2 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனவே குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகலை பெறுவதற்காக 30ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சீமான் உள்ளிட்ட 40 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை சீமான் உட்பட 23 பேர் திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜராகினர். மாஜிஸ்திரேட் திருவேணி, குற்றம்சாட்டப்பட்ட 40 பேரும் ஆஜரானால் தான் குற்றப்பத்திரிகை நகலை வழங்க முடியும். ஏப்ரல் 21ம் தேதி 40 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Related Stories: