காதலியின் வீட்டு கழிவுநீர் கால்வாயில் காதலனின் சடலம் மீட்பு: லக்கிம்பூர் கேரியில் பதற்றம்

லக்கிம்பூர் கேரி: லக்கிம்பூர் கேரியில் காதலியை பார்க்க சென்ற காதலனை கொன்று, கழிவுநீர் கால்வாயில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலியின் தந்தை கைது ெசய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த நசீம் ஷா (19) என்ற இளைஞர் கடந்த திங்கள்கிழமை இரவு மாயமானார். இவரது தந்தை அஜ்மத் ஷா, தனது மகன் காணாதது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதில், ‘பதேபூர் மஜ்ரா கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் சுக்லா மற்றும் அவரது மகளின் குடும்பத்தினரால் எனது மகன் கடத்தப்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்.

முதற்கட்ட விசாரணையில், நசீம் ஷா கடைசியாக ஒரு பெண்ணுடன் காணப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த ஜோடி கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளது. ஆனால், இருதரப்பு பெற்றோரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்தது. இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில், மாயமான நசீம் ஷாவின் சடலம் அவரது காதலியின் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கூடுதல் எஸ்பி அருண்குமார் சிங் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட பெண்ணின் தந்தை, நசீம் ஷாவின் கழுத்தை துணியால் நெரித்து கொன்று, உடலை சாக்கு மூட்டையில் அடைத்து, அவரது வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் சாக்கடையில் வீசியுள்ளார்.

காதலியின் குடும்பத்தினரிடம் விசாரித்ததில், நசீம் ஷா தனது காதலியை பார்க்க வந்துள்ளார். அப்போது காதலியின் ெபற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். பின்னர் நசீம் ஷாவை கொன்றுள்ளனர். வீட்டின் அருகே இருந்த கழிவுநீர் கால்வாயில் கிடந்த நசீம் ஷாவின் சடலம் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியான அந்த பெண்ணின் தந்தை, அவரது உறவினர்கள் இருவர் மீதும் ஐபிசி பிரிவுகள் 302, 201 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. தற்போது தந்தை கைது ெசய்யப்பட்டுள்ளார்.

மற்ற இருவரும் தலைமறைவாக உள்ளனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரம் இரு சமூகங்களைச் சார்ந்தது என்பதால், குறிப்பிட்ட அந்த கிராமத்தில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: