ஆம்பூரில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி தள்ளுவண்டி கடை, பைக்குகள் சேதம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்

ஆம்பூர்:  ஆம்பூரில் தறிகெட்டு ஓடிய லாரி அங்கிருந்த தள்ளுவண்டி கடை மற்றும் 2 பைக்குகள் மீது மோதியதில் சேதமானது. சேலம் மாவட்டத்தில் இருந்து நேற்று லாரி ஒன்று சென்னைக்கு பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு சென்றது. லாரியை சங்ககிரி அடுத்த தேவன்னகவுண்டனூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(57) என்பவர் ஓட்டி வந்தார். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த தள்ளுவண்டி கடையின் மீது மோதியது.

மேலும் அங்கு உணவு சாப்பிட வந்த 2 பேரின் பைக்குகள் மீதும் மோதியது. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து லாரி அங்கிருந்த பாதி வெட்டப்பட்ட மரத்தின் மீது மோதி நின்றது. விபத்தில் தள்ளுவண்டி கடை மற்றும் 2 பைக்குகள் சேதமானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: