உ.பி எம்எல்ஏக்கள் பதவியேற்பு: அகிலேஷூடன் கைகுலுக்கிய யோகி ஆதித்யநாத்

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிக் கொண்டனர். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜ்வாதி கட்சி 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளும் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். அவருடன் கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகிய இரு துணை முதல்வர்கள் உள்பட 52 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆளுநர் ஆனந்தி பென் படேல் அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் அக்கட்சியால் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதற்காக பேரவைக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பேரவை உள்ளே வந்தபோது அங்கு நின்றிருந்த அகிலேஷ் யாதவின் முதுகை தட்டிக் கொடுத்துக் கைகுலுக்கிக் கொண்டார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

Related Stories: