அன்னவாசல் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி பிராம்பட்டியில் முதல்முறையாக நடந்த மஞ்சுவிரட்டில் 370 காளைகள் பங்கேற்பு-சிறுமி உள்பட 7 பேர் காயம்

விராலிமலை : விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அன்னவாசல் ஒன்றியம், கீழக்குறிச்சி ஊராட்சி பிராம்பட்டி மதகு கருப்பு அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு முதன் முறையாக மஞ்சுவிரட்டு அங்குள்ள கோயில் திடலில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.மஞ்சுவிரட்டை உதவி ஆணையர்(கலால்) மாரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.காலை 10 மணிக்கு தொடங்கிய மஞ்சுவிரட்டு 1 மணிக்கு நிறைவடைந்தது. 370 காளைகள் பங்கேற்ற இந்த மஞ்சுவிரட்டில் நூற்றுக்கணக்காண இளைஞர்கள் வீரத்துடன் களம் இறங்கி காளைகளை அடக்கினர்.

ஆயிரக்கணக்காண பார்வையாளர்கள் பங்கேற்று மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர். இதில் பிராம்பட்டியைச் சேர்ந்த பாண்டிகுமாரின் 6 வயது மகள் ஹன்சிகா என்ற ஹாசினி மாடு முட்டியதில் காயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதே போல அங்கும் இங்கும் சிதறி ஓடிய மாடுகள் முட்டியதில் சதீஷ் (22), பழனிவேல் (20), கருணாஸ் (18), அழகுசுந்தரம் (59), வீரமணி (21) வெள்ளைச்சாமி(24) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

விராலிமலை தொகுதியில் முதல் மஞ்சுவிரட்டு

விராலிமலை தொகுதியை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு போட்டியில் போதிய அளவு முன் அனுபவம் இருந்தாலும் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுவது இதுவே முதன்முறை என்பதால் போட்டியை முறைபடுத்துவதில் தொய்வு நிலை காணப்பட்டது, மாடு முட்டி காயமடைபவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் அமர்த்தப்படவில்லை. இதனால் மாடு முட்டி காயமடைந்தவர்களை சகபார்வையாளர்கள், வீரர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

Related Stories: