இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்து நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், சிறைப்பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. இதனிடையே, மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை நேற்று நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஒரேநாளில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இந்நிலையில் ராமேஸ்வரம் கடற்கரையில் அனைத்து மீனவ சங்க நிர்வாகிகள் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: