நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சேர்ந்த புதிய நிர்வாகிகள், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்த நிலையில், சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதையடுத்து இதில் போட்டியிட்ட பாக்யராஜ் அணியை நாசர் அணியினர் வென்றனர். தேர்தலில் வெற்றிபெற்ற பாண்டவர் அணியை சேர்ந்த தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, கோவை சரளா, லதா உள்ளிட்ட வெற்றி பெற்ற நிர்வாகிகள் முதல்வரை தலைமை செயலகத்தில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாசர் கூறியதாவது:நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் புதியதாக பொறுப்பேற்று இருக்கும் நாங்கள், மிகப்பெரிய வெற்றியோடு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறோம். நடிகர் சங்க தேர்தல் வரலாற்றை பற்றி முதல்வர் எங்களிடம் கேட்டார். அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ, அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தோம். மேலும், பாதியில் கட்டி, முடிக்கப்படாமல் இருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தை முடிப்பதையே எங்கள் கோரிக் கையாக முன்வைத்தோம். இவ்வாறு அவர் கூறி னார். நேற்று மாலை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: