பாலியல் வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுதர முதல்வர் உத்தரவு: விருதுநகரில் ஐஜி அஸ்ரா கார்க் முகாம்; டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: டிஜிபி சைலேந்திர பாபு அனுப் பியுள்ள சுற்றறிக்கை: விருதுநகர் பெண் பாலியல் பலாத்கார வழக்கு சம்பந்தமாக இளம்பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் எழுத்து மூலமாக கடந்த 20ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு வழக்கு உடனடியாக விசாரணைக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில், தாயாருடன் குடியிருந்து வரும் 22 வயது இளம் பெண்ணிற்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்ததை வீடியோபதிவு செய்துள்ளார். பின்பு திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண் ஹரிஹரனை வற்புறுத்தியுள்ளார். திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் இளம்பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்த போது ஹரிஹரன் பதிவு செய்த வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதன்பின்னர் அந்த வீடியோவை அவரது நண்பர்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

ஹரிஹரன் நண்பர்கள் வீடியோவினை இளம்பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளதும் ஹரிஹரன் இளம்பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் 8 பேர் குற்றவாளிகள் என தெரியவந்தது. அதன்படி ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜீனத் அகமது ஆகியோர் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற நான்கு பேர் சிறார்கள், 18 வயதிற்கு உட்பட்ட இவர்கள் சிறார் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விசாரணை காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் துறை துணைத் தலைவர் பொன்னி, மதுரை மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், விருதுநகரில் முகாமிட்டு புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: