ஏற்காட்டில் ஆள்மாறாட்டம் செய்து ரூ.10 கோடி நிலத்தை அபகரித்த சேலம் அதிமுக நிர்வாகி கைது

சேலம்: மத்தியபிரதேசம் மான்சூர் பகுதியை சேர்ந்தவர் துர்கா சங்கர்(56). இவர் தனது உறவினர்கள் 4பேருடன் சேர்ந்து 1993ல் ஏற்காடு சேர்வராயன் மலை பகுதியில் 1.4 ஏக்கர் நிலத்தை வாங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் அந்த நிலத்திற்கு சென்று பார்த்த போது பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தங்களது நிலத்தை சேலம் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த மாநகர் மாவட்ட அதிமுக இளைஞர் அணி இணை செயலாளரும், ரியல் எஸ்டேட்காரருமான சுகுமார்(70) என்பவர் அபகரித்து இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக துர்கா சங்கர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடாவிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், துர்காசங்கருக்கு சொந்தமான நிலத்தை ஆள்மாறாட்டம் மூலம் சுகுமார் தனது பெயருக்கு பவர் செய்து கொண்டும், அதை வைத்து நிலத்தை பிளாட் போட்டு விற்றதும் தெரிய வந்தது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து, நிலத்தை அபகரித்த அதிமுக நிர்வாகி சுகுமாரை கைது செய்தனர்.

Related Stories: