பழநி,: அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.60 லட்சம் மோசடி செய்த அதிமுக முன்னாள் மேயரின் உதவியாளரை பழநி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியின் முன்னாள் மேயர் அதிமுகவை சேர்ந்த மருதராஜ். இவரது உதவியாளராக ஆவின் பாலகத்தில் பணிபுரிந்து வந்த திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த துரைராஜ் (52) இருந்து வந்தார். இவர் பழநியை சேர்ந்த பலரிடம் ஆவின் மற்றும் ரேஷனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேலை வாங்கி தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், மதுரையை சேர்ந்த முன்னாள் அமைச்சரிடம் பணத்தை கொடுத்ததாக கூறி மிரட்டி வந்துள்ளார்.