பெருங்களத்தூர் அருகே நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை

தாம்பரம்: பெருங்களத்தூர் அருகே உள்ள நெடுங்குன்றம் பகுதியில் நெடுங்குன்றம் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த ஏரியில் பல வருடங்களாக முதலைகள் உள்ளன. முதலைகள் இரவு நேரங்களில் ஏரியிலிருந்து வெளியே வந்து குடியிருப்பு வீடுகளில் உள்ள கோழி, வாத்து, நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது வழக்கம். இதனால், இரவு நேரங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் என யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். முதலைகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பல வருடங்களாக கோரிக்கை வைத்தனர்.  இருப்பினும், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏரியின் அருகில் உள்ள கருமாரியம்மன் தெரு குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள முதலை திடீரென புகுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வாலிபர்கள் சேர்ந்து முதலையை பிடித்து கயிற்றால் அதன் வாய் மற்றும் கால்களை கட்டினர். பின்னர், இதுகுறித்து வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி அங்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு எடுத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: