ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் தீபா, தீபக் சேர்ப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் தீபா மற்றும் தீபக்கை சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008-09ம் ஆண்டுக்கான செல்வ வரி தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 2008ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.  

இந்த உத்தரவுகளை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு, கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா காலமாகி விட்டதால் அவரது வாரிசுகளான தீபா, தீபக்கை வழக்கில் சேர்ப்பது குறித்து தீபா, தீபக் விளக்கம் அளிக்குமாறு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயணபிரசாத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா, தீபக்கை வழக்கில் சேர்க்க அனுமதி கோரி வருமான வரித்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தீபா, தீபக் ஆகியோரை சேர்க்க அனுமதியளித்து விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா, தீபக் தரப்புக்கு வழங்குமாறு வருமான வரித்துறை தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: