மீண்டும் பணி வழங்கக்கோரி கார் கம்பெனி புகை கூண்டின் மீது ஏறி மாஜி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்-சூளகிரி அருகே பரபரப்பு

சூளகிரி :  சூளகிரி அருகே மீண்டும் பணி வழங்கக் கோரி, கார் கம்பெனி புகை கூண்டின் மீது ஏறிய மாஜி ஊழியர்கள் 4 பேர், தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குண்டுகுறுக்கி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் கம்பெனி, கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு வாணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த் (33), தர்மபுரி மாரண்டஅள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் (28), சூளகிரி மேடுப்பள்ளி கிருஷ்ணன் (32), காவேரிப்பட்டணம் சத்யராஜ் (28) உட்பட 15 பேர், கடந்த 2016ம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிரந்தரம் செய்யக்கோரி, நிர்வாகத்திடம் தகராறு செய்ததால், அவர்கள் 15 பேரையும் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை, பணி நீக்கம் செய்யப்பட்ட 15 பேரும் கார் கம்பெனிக்கு வந்தனர். இதில் விஜயகாந்த், வெங்கடேஷ், கிருஷ்ணன், சத்யராஜ் ஆகிய 4 பேரும், கம்பெனியின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த புகை கூண்டின் மீது ஏறிய அவர்கள், தங்களை மீண்டும் பணியில் சேர்த்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். அவர்களுடன் வந்த மற்ற வாலிபர்கள் கம்பெனியின் நுழைவு வாயிலில் நின்று, பணி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கம்பெனி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார், சூளகிரி தீயணைப்பு மீட்பு வீரர்கள் உதவியுடன் தற்கொலை மிரட்டல் விடுத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். இதையடுத்து புகை கூண்டின் மீது இருந்து, 4 பேரும் கீழே இறங்கி வந்தனர். தொடர்ந்து கார் கம்பெனி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், மீண்டும் பணி கேட்டு வந்தவர்களை தங்களது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படியும், அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேலை கேட்டு வந்தவர்களில் 8 பேர் மட்டும், கார் கம்பெனி நுழைவாயில் அருகில் காத்திருந்தனர். மற்றவர்கள் அங்கிருந்து தொழிலாளர் நலத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: