சென்னை: உலக காது கேட்கும் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி: செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வம் என அய்யன் திருவள்ளுவர் ‘செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை’ எனச் சொல்கிறார். அத்தகைய செல்வமான செவித்திறன் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற்றாக வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு - விளிம்பு நிலை மக்களின் நலனைக் கவனத்தில் கொண்டு செயல்பட்ட தன்னிகரில்லாத் தலைவர் கலைஞர் என்பதையும் உணர்த்தும் விதமாக, ‘Cochlear Implant’ சிகிச்சைக்காக அவர் உதவியது குறித்து பிரபல மருத்துவர் மோகன் காமேஸ்வரன், கலைஞருக்கான மருத்துவர்களின் புகழஞ்சலிக் கூட்டத்தில் நெக்குருகிப் பேசியது என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது.