மதக்கலவரத்தை தூண்டும் வகையில் டிவிட்டர் பதிவு பாஜ பிரமுகர் சவுதாமணியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசு நடவடிக்கையை விமர்சித்தாக பதிவான வழக்குகளில் தமிழக பாஜ இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்திற்கு முன் ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணியின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பான செய்தியை மத சாயம் பூசி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தமிழக பாஜ இளைஞரணி தலைவர் வினோஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பபதிவு  செய்தது.

ஆக்கிரமிப்பில் உள்ள கிறித்துவ தேவாலயம் இடிக்கப்படவில்லை என்று ஒருவர் பேசி பகிர்ந்த காணொலியை தமிழக பாஜ செயற்குழு உறுப்பினர் சவுதாமணி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் தனியாகவும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் வினோஜ் செய்தியை பகிர்ந்ததை தாண்டி அரசின் செயல்பாட்டை தேர்தல் நடவடிக்கைகளுடனும் மதத்துடனும் தொடர்புபடுத்தி விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல சௌதாமணியின் டிவிட்டர் பகிர்வால் மதக்கலவரம் தூண்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த இரு வழக்குகளிலும் நீதிபதி பொங்கியப்பன் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், வினோஜ் பி. செல்வத்திற்கு முன் ஜாமீன் வழங்கியும், சௌதாமணிக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்தும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: