சென்னை: செல்வ வரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் சேர்ப்பது குறித்து பதில் அளிக்க அவரது வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, தீபக் விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2008-2009ம் ஆண்டுக்கான செல்வ வரி தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் கடந்த 2008ம் ஆண்டு அவரை விடுவித்து உத்தரவிட்டது.