பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு சென்று திரும்பியபோது ஆட்டோ மீது பைக் நேருக்கு நேர் மோதி 2 வாலிபர்கள் பலி-காட்பாடி அருகே நள்ளிரவு பயங்கரம்

வேலூர் : காட்பாடி அருகே பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு சென்று திரும்பியபோது, நள்ளிரவு ஆட்டோவும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். பைக்கில் வந்தவர் மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.வேலூர் தொரப்பாடி முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(32), ஜீவா நகரை சேர்ந்தவர் கார்த்தி(23). இவர்கள் 2 பேரும் வேலூரில் உள்ள பஞ்சுமிட்டாய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

காட்பாடி அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய இருவரும் மினி ஆட்டோவில் சென்றனர். வியாபாரம் முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்பினர்.காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் ரயில்வேகேட் அருகே வரும்போது எதிரே வேகமாக வந்த சேம்பள்ளி அடுத்த பாதநல்லூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் பைக்கும்,  ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஆட்டோவில் இருந்த ராஜசேகர், கார்த்திக் மற்றும் பைக்கில் வந்த ஆல்பர்ட் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ராஜசேகர் பரிதாபமாக இறந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்தியும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். ஆல்பர்ட் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ராஜசேகருக்கு மட்டும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிட்டதக்கது. ஆனால் குழந்தைகள் இல்லை. ஆட்டோ, பைக் நேர் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: