காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபுவை ஆதரித்து கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபுவை ஆதரித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று முல்லை நகர் சந்திப்பு, வள்ளுவர் தெரு, கண்ணதாசன் நகர் 6வது பிளாக் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வேட்பாளர் டில்லிபாபு இதே பகுதியில் குடியிருப்பவர். ஏற்கனவே இந்த பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். மக்கள் பிரச்னைகளில் தனி கவனம் செலுத்தக்கூடியவர்.

 அவரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கொசுத்தொல்லை, கொடுங்கையூர் குப்பை கிடங்கு உள்ளிட்டவைகளுக்கு தீர்வு காண்பார். அவரை நீங்கள் எந்த நேரமும் அவரது வீட்டிற்குச் சென்று பார்க்கலாம். உங்களில் ஒருவனாக இருந்து, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார். எனவே, டில்லிபாபுவுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்டி சேகர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன் கிருஷ்ணமூர்த்தி. பலராமன் இமையா கக்கன். சரளாதேவி. அகரம் கோபி. ரஜினி செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: